Jun 2, 2010

பவர் கட்

எனக்கு வேற எதுவும் வருத்தம் இல்லை.. அது எப்படி நான் தூங்கும் நேரம் ஈ.பி (EB) ஆட்களுக்கு இவ்வளவு சரியாக தெரிகிறது? நான் தூங்கும் நேரத்தை மிகத்துல்லியமாக பாதியாக பிரித்து, அந்த புள்ளியில் மின்சாரம் நிறுத்தப்படுவதை சமீபத்தில் கண்டுபிடித்திருக்கிறேன். அது பகலாக இருந்தாலும் சரி.. உதாரணத்திற்கு, 10 PM - 4 AM தூங்குகிறேன் என்று வைத்து கொள்ளுங்கள் (அட சும்மா ஒரு பேச்சுக்கு). சரியாக 1 மணிக்கு மின்சாரம் நிறுத்தப்படும். மதியமாக இருந்தாலும் இதே டெக்னிக் தான்.

ஒரு நாள், இரு நாள் கதை அல்ல இது. அக்னி வெயில் (?) ஆரம்பித்ததில் இருந்து.. இப்படியே தொடர்ந்து.. அது எப்படி அய்யா சரியாக 1 மணிக்கு தினமும் நிறுத்துகிறீர்கள்? அலாரம் வைத்து எழுந்து, பவரை நிறுத்திவிட்டு, பாத்ரூம் போய் விட்டு திருப்பி தூங்கிவிடுவீர்களா?



இருக்கும் வெப்பத்தில்.. மின்சாரமும் மின்விசிறியும் டப் என்று நிற்கும் அந்த நொடியில்.. உலகமே இருண்டு.. முதலில் மென்மையாக ஆரம்பிக்கும் கசகசப்பு, நேரம் ஆக ஆக (ரொம்ப நேரமெல்லாம் இல்லை.. ஓரிரு நிமிடங்கள்) வெப்பம் வெப்பன் போல தாக்க.. வியர்வை சுரப்பிகள் திடும் என்று விழித்துக்கொண்டு கடும் வேலை செய்ய.. கையா முயா என்று சொரிந்து கொள்ள வேண்டும் என்று வரும் இச்சையை (சுய அரிப்பு) கஷ்டப்பட்டு கட்டுப்படுத்தி முடிப்பதற்குள் மண்டை மூஞ்சி எல்லாம் நனைந்து போயிருக்கும். அதற்கு மேல் படுக்க-தடுக்க முடியாது (ஒரு தடவை பாக்கலாம் ஒரு கை என்று முரண்டு பிடித்து படுத்து தான் பார்த்தேன்.. தலையணை நம்பர் 1 போனது போல நனைந்து வெயிலில் காய வைத்ததுதான் மிச்சம்)..

எழுந்து உட்கார்ந்ததும், அழுகை அழுகையாக வரும். இந்த நேரம் பார்த்து பக்கத்தில் நியூஸ் பேப்பர், புத்தகம் எதுவும் இருக்காது.. அடிச்சி பிடிச்சி தேடி, விசிறு விசிறென்று விசர் பிடித்தது போல விசிறி, துண்டை வைத்து முகத்தை (கண்ணீரையும்) துடைத்துக்கொண்டு உட்காரும் அந்த நேரத்தில்...

கேயின்ன்ன் வ்ர்ர்ரர்ர் சார்ர்ர்ரர்ர் என்று கொசுக்கள் 'பெண் சிங்கமாக' மாறி காதருகில் பறக்க, இதற்கு முன் இருந்த நிலைமையே மேல் என்று ஜென் தனமாக தத்துவம் உணர வைத்து, என்ன விரட்டினாலும் போகாமல் குடையும். இங்குதான் யாரையாவது பிடித்து அடிக்கலாமா என்று தோன்றும்.. பின்பு நம்மையே அடித்து கொள்ளலாம் என்று (கவுண்டமணி சாட்டை வைத்து அடித்து கொள்வது போல).. வியர்வை ஊத்துவதும் நின்ற பாடில்லை, கொசு பாடுவதும் நிற்கவில்லை. எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை, கடன் வாங்கியாவது நாளைக்கு இன்வர்டர் அல்லது ஜெனெரேட்டர் வாங்கி வைத்துவிட வேண்டும் என்று தோன்றுவது இப்போதுதான் (தினமும் இதே இடத்தில் தான் இந்த எண்ணம் வரும்)..

இந்த நேரத்தில், சுவாரஸ்யமான ஒரு விளையாட்டு விளையாடுவார் கரண்டுகாரர்.. 'கம்கு' என்று ஒரு செகண்ட் மின்சாரத்தை விட்டு நிறுத்துவார். அந்த ஒரு நொடிப்பொழுதில் நம் கண்ணில் வந்து மறையும் நம்பிக்கை - கடைசி பந்தில் சிக்சர் அடித்து ஜெயிக்க வேண்டிய கட்டத்தில், பந்து உயர உயர பறந்து.. கடைசியில் காட்ச் ஆவதற்கு சமம்.. அல்லது அதனினும் கொடூரம்..


எல்லா உணர்ச்சிகளும் ஓய்ந்து கிடக்கும் போது, கடவுளுக்கு என் மேல் இரக்கமே
 இல்லையா என்று சரணாகதி அடைந்து கடைசியாக ஒரு ட்ரை.. அதற்கும் எந்த அசைவும் இருக்காது. செத்த பிணம் (?) போல உட்கார்ந்திருக்கும் நேரத்தில் (கொசுவின் சங்கீதம் கூட பழக ஆரம்பிக்கும் வேளை), பொழச்சு போங்க என்று விடப்படும் மின்சாரம்.. மகிழ்ச்சியடையக்கூட தெம்பில்லாமல் தூங்கி விடுகிறேன்..

*****

தமிழ்நாட்டு வெளியூர்கார நண்பன் ஒருவன் வடிவேலு பாணியில் சொல்கிறான்.,

'போங்க தம்பி.. என்னமோ ரெண்டு மணி நேரம் கரண்ட் போறதுக்கு பெருசா பீத்தறீங்க.. அங்கல்லாம் ரெண்டு நாள் ஆனாலும் கரண்டு வராது.. எங்கிட்ட இருந்து துளி சத்தம் வராது, எங்கயும் ஓடுனதும் கிடையாது..' என்று சொல்லி விட்டு, எங்கோ பார்த்து கை அசைத்து,

'ஹலோ, நேத்து கரண்டு வரும்னு சொன்னீங்க வரவே இல்ல?' என்ற படியே நகர்கிறான்..

******

டிஸ்கி: மூன்று நாட்கள் வெளியூர் போக வேண்டி இருந்தது.. போய் விட்டு திரும்பியதும் அம்மா சொன்னது 'டேய், இந்த மூணு நாளும் கரண்டு போகவே இல்ல'



- பிரசன்னா (கொத்து பரோட்டா)

19 comments:

அண்ணாமலை..!! said...

வாங்க்க பாஸ்! இன்னைக்கு நேத்து நடக்குறதா?
இதெல்லாம் சகஜமா நடக்..கிறது தானே!
:)

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

ஒருவேளை, தலைமாட்டுப்பகுதியை மாற்றிப்பார்க்கவும்.. கரண்ட் போகாமல் இருக்க சான்ஸ் இருக்கு சார்..

( சீன வாஸ்துல..பக்கம் 18 ல சொல்லியிருக்கு பாஸ்.. ஹி..ஹி)

ஹேமா said...

நகைச்சுவையாய் சொல்லியிருக்கீங்க உங்க அவஸ்தையை.நல்லாயிருக்கு பிரசன்னா.

ILLUMINATI said...

ராசா,அங்கனையும் அதே இம்சையா....இங்கனையும்....நைட் ரெண்டு மணிக்கு கரண்ட் கட் பண்றானுங்க நாதாரிப் பயலுங்க...

//இந்த நேரத்தில், சுவாரஸ்யமான ஒரு விளையாட்டு விளையாடுவார் கரண்டுகாரர்.. 'கம்கு' என்று ஒரு செகண்ட் மின்சாரத்தை விட்டு நிறுத்துவார். அந்த ஒரு நொடிப்பொழுதில் நம் கண்ணில் வந்து மறையும் நம்பிக்கை - கடைசி பந்தில் சிக்சர் அடித்து ஜெயிக்க வேண்டிய கட்டத்தில், பந்து உயர உயர பறந்து.. கடைசியில் காட்ச் ஆவதற்கு சமம்.. அல்லது அதனினும் கொடூரம்..//

ரொம்ப பாதிக்கப்பட்டு இருக்கீறு போல... :)

//மூன்று நாட்கள் வெளியூர் போக வேண்டி இருந்தது.. போய் விட்டு திரும்பியதும் அம்மா சொன்னது 'டேய், இந்த மூணு நாளும் கரண்டு போகவே இல்ல'//

ஹாஹஹா....சங்கத்துல சேந்துக்கங்க தல... நம்மள மட்டும் எப்புடித்தான் கண்டு பிடிச்சு தொல்ல பண்றானுங்களோ ?

குறிப்பு:நான் பதிவர் சங்கத்தை சொல்ல வில்லை...

ஜில்தண்ணி said...

//இந்த நேரம் பார்த்து பக்கத்தில் நியூஸ் பேப்பர், புத்தகம் எதுவும் இருக்காது.. அடிச்சி பிடிச்சி தேடி//

நான் கூட படிக்கதான் போறீங்களோன்னு தப்பா நினச்சுட்டேன்

போன வருசம் இந்த கரண்டு கட்டுக்கு பயந்துகிட்டு தினமும் தியேட்டர் பக்கம் போயிடுவோம்(ஓசி பாஸ் தான்)

அத ட்ரை பன்னுங்க அப்டி இல்லன்னா மின்விசிறிய கையாலயே சுத்துனீங்கனா,காத்தும் வரும் பொழுதும் போகும்

Prasanna said...

@அண்ணாமலை,
கரெக்டுதான்.. இவிங்க எப்போமே இப்படித்தான்.. இதுக்கு பயந்தா தொழில் பண்ண முடியாது ;)


@பட்டாபட்டி,
நல்ல ஐடியா..! தலைமாட்டை போய் எதாச்சும் வெளிநாட்டில் வச்சிட்டா பவர் கட்டே இருக்காதுல்ல..?


@ஹேமா,
எது.. அவஸ்தை நல்லா இருக்கா, அவ்வு :)


@ILLUMINATI,
ஆமா இல்லுமி.. கடுப்படிக்கிறார் மை லார்ட்னு சொல்ற மாதிரி நித்தம் நித்தம் கட் பண்றாங்க..
ஓகே நம்ம சங்கத்தின் பணிகள் என்ன ;)


@ ஜில்தண்ணி,
ஜில்லு.. நீங்க சரியான வாலு :))

ILLUMINATI said...

//ஓகே நம்ம சங்கத்தின் பணிகள் என்ன ;)//

current இல்லதப்ப சொறிஞ்சு விட்டுகிறது,சொம்பு தூக்கி தண்ணி குடிக்குறது,மொக்க போடறது,சண்டை போட்டுகிறது(பொழுது போக வேணாம்),அப்புறம் கரண்ட் கம்பில கால வச்சுக்கிட்டு எகத்தாளம் பேசுறது...

இந்த முறையும் நான் பதிவர் சங்கத்த பத்தி எதுவுமே சொல்லல... :)

Anisha Yunus said...

ஒருவேளை போன ஜென்மத்துல நீங்க கரண்ட் ஆபீஸரா பெறந்து இதே போல யாரையாவது நோகடிச்சு, அவர் தந்த சாப‌மோ? O my God..!!

சிநேகிதன் அக்பர் said...

சொன்னா வயிறெரியக்கூடாது :)

இங்கு நான் வந்த எழுவருடத்தில் பவர் கட் என்பதே இல்லை :)

Prasanna said...

@ILLUMINATI,
ha ha ha பட்டைய கெளப்பும் சங்கம் :)


@அன்னு,
இல்ல போன ஜென்மத்துல நான் பண்ணது அதுக்கு முந்தின ஜென்மத்துல அவர் பண்ணின பாவத்துக்கு.. சோ கணக்கு சரியா போச்சு.. இன்னும் ஏன் கண்டின்யூ ஆகுது தான் தெரியல :)



@அக்பர்,
அப்போ ஒடனே அங்க கெளம்பி வரேன்.. வந்து உங்களுக்கும் கரண்டு இல்லாம ஆக்கறேன் :))

மகேஷ் : ரசிகன் said...

ரொம்ப நொந்து போய்ட்ட போல?

Prasanna said...

@மகேஷ் : ரசிகன்,
கொஞ்ச நஞ்சம் இல்லண்ணா.. இந்த பதிவு போட்ட அன்று இரவு 11.30PM-2.30AM கட் :)

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

இந்த கொடுமைய நெனச்சாதாங்க ஊருக்கு வந்து செட்டில் ஆகவே பயமா இருக்கு... இன்னும் ஒண்ணு தண்ணி பிரச்சனை (நான் pipe ல வர்ற தண்ணிய சொன்னேன்... நீங்க தப்பா புரிஞ்சுட்டா நான் பொறுப்பில்ல). கடேசீல உங்க அம்மா சொன்ன டயலாக் சூப்பர்... அப்ப பிரச்சன பிரசன்னா கிட்ட தானோ... ஹி ஹி ஹி

ப்ரியமுடன் வசந்த் said...

//'டேய், இந்த மூணு நாளும் கரண்டு போகவே இல்ல'//

haa haa

நல்ல ராசி பிரசன்னா உங்களுக்கு ஓ அதான் முன்றாவது கையில் விசிறியுடன் குழந்தை என்றொரு போஸ்டா?

சாந்தி மாரியப்பன் said...

//அம்மா சொன்னது 'டேய், இந்த மூணு நாளும் கரண்டு போகவே இல்ல//'

உங்க அம்மா சொன்னது டாப் :-))

துரோகி said...

அனுபவிச்சு எழுதி இருக்கீங்க போல.....நல்லா இருக்குது!

மதுரை சரவணன் said...

அவஸ்தையை ரசித்து எழுதியிருக்கீங்க. வாழ்த்துக்கள்

Prasanna said...

@ அப்பாவி தங்கமணி,
தண்ணி பிரச்சன இன்னும் ஆரம்பிக்க ஆரம்பிக்கல (நானும் குழாய் தண்ணீரைத்தான் சொல்றேன்).. ஹி ஹி அதான் தீர்க்க தரிசனமா பேரு வச்சிருக்காங்க எனக்கு.. பிரசன்(னை)னானு :)



@ ப்ரியமுடன்...வசந்த்,
அதேதாண்ணா.. இனி தினம் கட் பண்ண பண்ண ஒரு போஸ்டு போடப்போறேன்.. ஓயாது இந்த போராட்டம் :)



@ அமைதிச்சாரல்,
வருகைக்கும், கருத்திற்கும் மிக்க நன்றி!


@ துரோகி & மதுரை சரவணன்,
ஆமா அவஸ்தைய ரொம்ப எதிர்க்க முடியல.. அதுனால அத ரசிக்கறேன்னு சொல்லி சரண்டர் ஆயாச்சு :) வருகைக்கும், கருத்திற்கும் மிக்க நன்றி!

cheena (சீனா) said...

ஹாய் பிரசன்னா - சூப்பர் - கரெண்ட் ராத்ரில எல்லாம் கட் பண்றாங்களா ? அது சரி - பாவம் பா நீ - நல்வாழ்த்துகள் ( எதுக்கு கட் ஆகறதுக்கா ) நட்புடன் சீனா